செய்திகள்

நைஜீரியா: போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை தாக்குதலில் 13 பேர் பலி

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை தாக்குதலில் 13 பேர் பலியானதாகவும், 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மாலை மலர்

அபுஜா:

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பியு நகரில் நேற்று இந்த தாக்குதல் நடந்துள்ளது. அந்நகரில் உள்ள மார்கெட்டில் நுழைந்த இரண்டு பெண் தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தனர்.

இந்த தாக்குதலில் 13 பேர் பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 18 பேர் பலியானதாக உள்ளூர் போராளி குழு கூறியுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதலை நடத்திய பெண் தீவிரவாதிகள் போகோ ஹராம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.