துருக்கி அதிபர் டாய்யிப் எர்டோகன் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். தனது மனைவியுடன் புதுடெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மத்திய மந்திரி விஜய் கோயல் மற்றும் வெளியுறவு துறை உயரதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
கடந்த 2008-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா வந்துள்ள எர்டோகன் நாளை துணைக் குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அப்போது என்.எஸ்.ஜி.யில் இந்தியா இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்க வேண்டும் என இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சிரியா அகதிகளை துருக்கி ஏற்றுக் கொள்ளும் விவகாரம், சர்வதேச அளவிலான பயங்கரவாதம், இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. என்.எஸ்.ஜி.யில் இந்தியா இணைவதற்கு துருக்கி ஆட்சேபனை தெரிவிக்காது என எர்டோகனின் தனிச்செயலாளர் முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.