களக்காடு:
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா பிறந்த நாளை கிராமங்களில் இருந்து மாநகரம் வரை உண்மையான தொண்டர்களான நாங்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறோம். எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு கோர்ட்டில் உள்ளது. கோர்ட் தீர்ப்பு வந்ததும் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஆதரவாக ஓட்டு போடுவார்கள். ஆட்சி தானாக கலையும்.
பெண்களுக்கு மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் ஜெயலலிதா திட்டமாகும். இதனை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் நடப்பது பிரதமர் மோடியின் ஆட்சி ஆகும். தற்போது பன்னீர் செல்வம் நான் பிரதமர் சொன்னதினால்தான் தியானம் செய்ய சென்றேன். ஆட்சிக்கு எதிராக வாக்களித்தேன். பின்னர் எடப்பாடியுடன் சேர்ந்தேன் என அவரே பேசி வருகிறார். இதன் மூலம் அவர் பா.ஜ.க.வின் ஏஜெண்ட் என்பதை வெளிபடுத்தி வருகிறார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை கிடைக்காமலும், வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமலும் உள்ளனர்.
எம்.எல்.ஏ. பிரபுவை எங்களிடம் அனுப்பி வைத்தது தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் ஓராண்டு கால சாதனை ஆகும். இன்னும் நிறையபேர் என்னிடம் பேசி வருகின்றனர். அவர்களும் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள். சென்னையில் திறக்கப்பட்டுள்ள சிலை ஜெயலலிதா சிலை மாதிரி இல்லை. அது எடப்பாடியின் அம்மா சிலையா, பன்னீர் செல்வத்தின் அம்மா சிலையா என்பது தெரியவில்லை.
உள்ளன்போடு சிலை செய்யாமல் கடமைக்காக சிலை செய்ததன் வெளிபாடு தான் சிலை இவ்வாறு வந்துள்ளது. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என அறிவிக்கப்பட்ட உடன் ஜெயலலிதாவிற்கு நாங்கள் கம்பீரமாக சிலை அமைப்போம்
இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #tamilnews #ttvdinakaran