‘இரட்டை இலை’ சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் டி.டி.வி. தினகரனுடன் தொடர்புடையவர்களை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகிறார்கள்.
நேற்று ஆதம்பாக்கத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மன்னார்குடியை சேர்ந்த மோகனரங்கம் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் போரூருக்கு சென்று தினகரனுக்கு நெருக்கமான சிலரது வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் டெல்லி போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படையினர் நேற்று இரவு 9.30 மணியளவில் சென்னை சவுகார்பேட்டை நாராயணமுதலி தெருவில் உள்ள ஒரு வீட்டில் நரேந்திர ஜெயின் என்பவரை தேடி சென்றனர்.
நாராயணாமுதலி தெருவில் 81-ம் எண் கொண்ட வீட்டு முகவரியை கையில் வைத்திருந்தனர். பழைய எண்.81, புதிய எண்.81 ஆகிய இரு முகவரியிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் நரேந்திர ஜெயின் என்ற பெயரில் அங்கு யாரும் இல்லை. சுமார் 1 மணி நேரம் தேடிவிட்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
அதன்பிறகு டெல்லி போலீசார் செல்போன் டவர் சிக்னல் மூலம் பெரம்பூர் வீனஸ் மதுரை மாடசாமி மடம் தெரு பகுதியில் ஒரு நபரை தேடி சென்றனர். ஆனால் அந்த முகவரியில் ஒரு பிரிண்டிங் பிரஸ் இருந்தது.
நள்ளிரவு 1 மணி வரை தேடியும் அந்த நபரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து டெல்லி போலீசார் அங்கிருந்து திரும்பி சென்றனர்.