சென்னை:
அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை வழங்கியதாக டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, எம்.எல்.ஏ. வெற்றிவேல் உள்ளிட்டோர் மீது சேலம் அன்னதானபட்டி போலீசார் தேச விரோத வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.
அதில், தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழி வாங்கும் நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
மேலும் துண்டு பிரசுரத்தில் தன்னுடைய படம் இடம்பெற்றதால் தன் மீது இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் தன் படத்தை அதில் அச்சிட்டவர் யார் என்று தனக்கு தெரியாது என்றும் அதனால் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரகாஷ், சம்பந்தப்பட்ட நீதிபதியே இந்த மனுவை விசாரிக்க வேண்டும் எனக்கூறி, வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.