செய்திகள்

போலீஸ் வீசாரணை முடிந்து டிடிவி தினகரன் கோர்ட்டில் ஆஜர்: மே 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போலீஸ் காவல் முடிந்து இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் நீதிமன்ற காவலை மே 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது, தினகரனை  5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.

தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்த போலீசார், விசாரணைக்காக கடந்த வியாழக்கிழமை சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்யைில் வைத்து அவரிடம் மூன்று நாட்களாக விசாரணை நடந்தது. அதன்பின் சனிக்கிழமை (29-ந்தேதி) மாலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே டி.டி.வி.தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ள 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மே 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.