செய்திகள்

திருச்சி, வேலூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் 123 பேர் நீக்கம்

திருச்சி புறநகர், வேலூர் மேற்கு, ஈரோடு புறநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் 123 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

தினகரனுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் திருச்சி புறநகர், வேலூர் மேற்கு, ஈரோடு புறநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 123 பேரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நீக்கி இன்று உத்தரவிட்டு உள்ளனர்.

கட்சி கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், கழக உடன் பிறப்புகள் யாரும் அவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு புறநகர் மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 13 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், பவானி, வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த தலா ஒருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி புறநகர் மாவட்டத்தில் மாவட்ட அவை தலைவர் அன்பில் தர்மதுரை உள்பட 28 பேரும், திருவெறும்பூர் ஒன்றியத்தை சேர்ந்த 5 பேரும், மண்ணச்சநல்லூர், துறையூர், உப்பிலியாபுரம், ஒன்றியத்தை சேர்ந்த தலா 2 பேரும், லால்குடி ஒன்றியத்தை சேர்ந்த 12 பேரும், புள்ளம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த 7 பேரும், மருங்காபுரி ஒன்றியத்தை சேர்ந்த 6 பேரும், மணப்பாறை ஒன்றியத்தை சேர்ந்த 7 பேரும், வையம்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த 3 பேரும், துவாக்குடியை சேர்ந்த 7 பேரும், மணப்பாறையை சேர்ந்த 20 பேரும், கூத்தைப்பார் பேரூராட்சியை சேர்ந்த 3 பேரும், லால்குடி பேரூராட்சியை சேர்ந்த 2 பேரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். #Tamilnews