செய்திகள்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க அரசு துடிக்கிறது- தினகரன் கண்டனம்

8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கிறது என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது மக்களுக்கு உயிர் முக்கியம். அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று திடீரென மிரட்டும் தொனியில் வசனம் பேசியிருக்கிறார் பழனிசாமி. இதுதான் இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களின் உண்மை முகம்.

சோறு போடுகின்ற விவசாய நிலங்களையும், ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் அழித்து, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக 8 வழிச்சாலை போட துடிக்கின்ற பழனிசாமியின் நயவஞ்சகம் நிச்சயம் நிறைவேறப்போவதில்லை.

இவர்களுக்கு மக்கள் எழுதியுள்ள முடிவுரை மே 23-ந்தேதி தெரிந்து விடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.