செய்திகள்

என்னிடம் வந்த புதுவை எம்.எல்.ஏ.க்கள் திடீரென காணாமல் போய் விட்டனர்- தினகரன்

என்னிடம் வந்த புதுவை எம்.எல்.ஏ.க்கள் திடீரென காணாமல் போய் விட்டதாக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் கூறினார்.

புதுச்சேரி:

விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. புதுவை வழியாக சென்றார்.

புதுவையில் உள்ள ஒரு ஓட்டலில் ஓய்வு எடுத்த டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒட்டன்சத்திரத்தில் ரூ.ஆயிரத்து 300 கோடியில் சாலை அமைக்க உலக வங்கியில் கடன் பெற்று டெண்டர் விட்டு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

இதில் ஊழல் நடந்துள்ளதாக வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் புகார் தெரிவித்தனர். அதற்கு பதில் அளிக்காமல் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து இருப்பது நல்லதல்ல.

மக்கள் இந்த ஆட்சி வேண்டாம் என்று நினைக்கின்றனர். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஆனால், ஆட்சியை நடத்தினால் போதும் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ‘நித்ய கண்டம், பூரண ஆயுசு’ என்ற நிலையில் இந்த ஆட்சி உள்ளது.

புதுவை ராஜ்யசபா எம்.பி. கோகுலகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் வந்தனர். ஆனால், திடீரென காணாமல் போய் விட்டனர். அவர்கள் தற்போது என்னிடம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வில் டி.டி.வி. தினகரன் அணி தனியாக பிரிந்த போது, புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கோகுலகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் டி.டி.வி. தினகரனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews

SCROLL FOR NEXT