செய்திகள்

திவாகரன் புதிய கட்சிக்கு யாரும் செல்ல மாட்டார்கள் - டிடிவி தினகரன்

திவாகரன் பூமிக்கு அடியில் அதாவது பதுங்கு குகையில் தான் இன்னும் இருந்து வருகிறார். அவரது புதிய கட்சிக்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறினார். #TTVDhinakaran #Divakaran

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நிருபர்களுக்கு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி பிரச்சனைக்காக ஜெயலலிதா பல்வேறு வகையிலும் போராடி உறுதியான நிலையை ஏற்படுத்தி கொடுத்தார். அவரது பெயரை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் இப்போது விசித்திரமான ஆட்சி நடந்து வருகிறது. யாருக்கோ இவர்கள் கைக்கட்டி சேவகம் செய்து வருகிறார்கள் என்பது இங்குள்ள குழந்தைகளுக்கு கூட தெரியும்.

விதி எண் 110-ஐ பயன்படுத்தி பல்வேறு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இல்லை என சொல்லி தட்டிக் கழிக்கவெல்லாம் முதல்வர், விதிஎண் 110-ஐ இப்போது பயன்படுத்துகிறார்.

மத்திய அரசின் பாதுகாப்பில் இந்த அரசு ஓடிக்கொண்டுள்ளது. இவர்களது ஆட்சியில் தொடர முடியாமல் தான் 18 எம்.எல்.ஏ.க்களும் வெளியே வந்தனர். இவர்கள் கட்சி நலனுக்காக தியாகம் செய்துள்ள அனைவரும் இன்றைக்கே ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளனர்.

இந்த ஆட்சியின் நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் தான் எல்லா போராட்டமும் நடக்கும். அதன் பிறகு பாராளுமன்ற தேர்தல் வந்துவிடும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளும் ஆர்.கே.நகர் போலவே மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளன.

வரும் தேர்தலில் 39 இடங்களிலும் வெற்றி பெற்று மத்தியில் யார் ஆட்சியமைப்பது என்பதை தமிழகம் தான் தீர்மானிக்கும்.

தனியரசு, கருணாஸ், தமிமூன் அன்சாரி 3 பேரும் தகுந்த நேரத்தில் முடிவெடுப்பார்கள். அவர்கள் மூவேந்தர்கள் போல சுதந்திரமாக உள்ளனர்.

திவாகரன் பூமிக்கு அடியில் அதாவது பதுங்கு குகையில் தான் இன்னும் இருந்து வருகிறார். கட்சி பெயரை கேட்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அண்ணாவிற்கு இவருக்கும் என்ன சம்பந்தம்? அ.தி.மு.க.வில் அவர் உறுப்பினர் கூட கிடையாது. எப்படி கட்சியினர் அவர் பக்கம் செல்வார்கள்? அவர் என்றும் தனிமரம்தான்.