செய்திகள்

சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு - புதிய கட்சி தொடக்கம் குறித்து ஆலோசனை

வரும் 15-ம் தேதி புதிய கட்சியின் பெயரை அறிவிக்க உள்ள நிலையில், பெங்களூர் சிறையில் சசிகலா உடன் டி.டி.வி தினகரன் இன்று முக்கிய சந்திப்பு நடத்தியுள்ளார். #Sasikala #TTVDhinakaran

மாலை மலர்

பெங்களூரு:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் பரிந்துரைத்த 3 பெயர்களில் ஒரு கட்சி பெயரை அங்கீகரிக்கும்படியும் அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறும் தேர்தல் கமி‌ஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து புதிய கட்சியை தினகரன் தொடங்க உள்ளார். புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை வருகிற 15-ந்தேதி காலை 9 மணிக்கு மதுரை மாவட்டம் மேலூர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தினகரன் அறிமுகம் செய்து வைக்கிறார். புதிய கட்சியின் கொடியையும் ஏற்றி வைக்கிறார்.

இந்த நிலையில் இன்று பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் சந்தித்து பேசினார். இதற்காக அவர் நேற்று இரவே சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பெங்களூரு வந்து ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார்.

இன்று பிற்பகலில் அவர் சசிகலாவை சந்தித்து பேசினார். புதிய கட்சி மற்றும் கொடி குறித்து சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கடந்த வாரம் காய்ச்சலால் அவதிப்பட்ட சசிகலா சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அந்த நேரத்தில் தினகரன் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் சசிகலாவை நேரில் சென்று சந்திக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews