தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். வார்டு வாரியாக சென்று அவர் காயமடைந்தவர்களை பார்த்து விபரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
தூத்துக்குடியில் இருந்து காவல்துறை வெளியேறவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தினார்.