செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி- 2 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 2 பேரை கைது செய்தனர்.

மாலை மலர்

உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் தலைமையிலான போலீசார் நேற்று காலை உளுந்தூர்பேட்டை பிரகாஷ்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவல்கள் தெரிவித்தனர்.

இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர்கள் 2 பேரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது.

இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே குணமங்கலம் பகுதியை சேர்ந்த சேகர்(42), பாளையப்பட்டு தெருவை சேர்ந்த சொக்கநாதன்(45) என்பதும் அவர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது சேகர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் ராஜமன்னாரை குத்த முயன்றார்.

இதைபார்த்து சுதாரித்துக் கொண்ட சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் ராஜமன்னார் சேகரை மடக்கி பிடித்து அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கினார். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சேகர், சொக்கநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் போலீஸ்காரரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.