முசிறி:
முசிறி பி.எஸ். அக்ரஹாரம் படித்துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளி மூட்டைகளாக கட்டி இரு சக்கர வாகனங்களில் கடத்தப்படுவதாக முசிறி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி வள்ளிநாயகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, சிலர் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தி சென்றனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் கிராம நிர்வாக அதிகாரி பிடிக்க முயன்றார்.
இதையடுத்து மணல் கடத்தல்காரர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளால் கிராம நிர்வாக அதிகாரி மீது மோதி கொல்ல முயன்றார். மேலும் மணல் மூட்டைகளை தள்ளிவிட்டும், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டை அங்கேயே நிறுத்திவிட்டும், மணல் கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த கிராம நிர்வாக அதிகாரி வள்ளிநாயகன், சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews