செய்யாறு:
செய்யாறு அடுத்த அனக்காவூர் சத்திவினாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (வயது 36). திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர். வேலூரில் நடக்கும் மாநாட்டுக்கு செய்யாறு பகுதியில் இருக்கும் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திவிட்டு நேற்று இரவு செய்யாறு பைபாஸ் ரோடு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்பகுதியில் மின்சாரம் இல்லை. அங்கு திடீரென பைக்குளில் வந்த மர்ம நபர்கள் ஜெகன்நாதனை உருட்டு கட்டையால் தாக்கினர். நிலை தடுமாறி கீழே விழுந்தவரை கத்தியால் மண்டையிலும், முதுகிலும் வெட்டி கொலை செய்ய முயன்றனர். அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்தனர்.
அதற்கு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த ஜெகன்நாதன், செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் செய்யாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை நடத்தி வருகிறார்.