செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ரஷிய வக்கீலை சந்தித்த டிரம்ப் மகன்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ரஷிய வக்கீலை நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவரில் கடந்த ஆண்டு ஜூன் 6-ந் தேதி சந்தித்ததை டிரம்பின் மகன் ஜான் டிரம்ப் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

வாஷிங்டன்:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி அமெரிக்க புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் டிரம்பின் மகன் ஜான் டிரம்ப், ரஷிய அதிபர் கிரம்ளின் மாளிகையுடன் தொடர்புடைய ஒரு வக்கீலை சந்தித்து பேசியதை ஒப்புக் கொண்டதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கை சேதப்படுத்தும் விதமாக தகவல்களை வெளியிடுவதாக ரஷிய வக்கீல் நடாலியா என்பவர் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து அவரை ஜான் டிரம்ப் சந்தித்துள்ளார். அப்போது டிரம்ப்பின் தேர்தல் பிரசாரக் குழு தலைவர் பால் மனாபோர்ட், டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ரஷிய வக்கீலை நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவரில் கடந்த ஆண்டு ஜூன் 6-ந் தேதி சந்தித்ததை ஜான் டிரம்ப் ஒப்புக் கொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு எதுவும் இல்லை என்று ஜனாதிபதி டிரம்ப் மறுத்து வரும் நிலையில் டிரம்பின் மகன் ரஷிய வக்கீலை சந்தித்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.