வாஷிங்டன்:
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1300 பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் கூடுதலாக சுங்கவரி விதித்தது. அவற்றில் அலுமினியம், ஸ்டீல் போன்றவை முக்கிய பொருட்களாகும்.
அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சோயா பீன்ஸ், ஆரஞ்சு ஜூஸ், விமான உதிரிபாகங்கள் உள்பட 106 பொருட்களுக்கு சீனா கூடுதலாக சுங்கவரி விதித்தது. இதனால் இரு நாடுகளின் வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் சுங்கவரி விதிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருகிறார். இது குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சீனாவின் வர்த்தக நடவடிக்கை முறையற்றது. நமது விவசாயிகள் மற்றும் பொருள் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக ரூ.7 லட்சம் கோடி சுங்க வரி விதிக்கும்படி அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க விவசாயிகளை பாதுகாக்க திட்டமிடும்படி வேளாண் துறை அதிகாரிகளையும் வலியுறுத்தியுள்ளார். #Trump