கோப்புக்காட்சி 
செய்திகள்

வடகொரியாவை அடக்குவது எப்படி?: ராணுவ ஆலோசகர்களுடன் டிரம்ப் அவசர சந்திப்பு

போர் விமானங்களை அனுப்பி மிரட்டியதை அடுத்து வடகொரியாவை அடக்குவது எப்படி?: என்பது தொடர்பாக ராணுவ ஆலோசகர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் அவசரமாக சந்தித்தார்.

வாஷிங்டன்:

அமெரிக்க போர் விமானங்கள் நேற்று இரவு கொரிய தீபகற்ப பகுதியில் வட்டமடித்து வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்தன. குவாம் தீவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டு சென்ற 2 போர் விமானங்கள் ஜப்பான் மற்றும் தென்கொரிய வான்பகுதியில் பறந்தன.

தென் கொரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்தபோதுஅவற்றுடன் தென்கொரியாவின் 2 போர் விமானங்களும் இணைந்து சென்றன. இதேபோல் ஜப்பான் பகுதியில் அமெரிக்க விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது ஜப்பான் நாட்டின் போர் விமானங்களும் இணைந்துகொண்டன.

இந்நிலையில், வடகொரியாவை அடக்குவதற்கு எடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ராணுவ உயரதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் அதிபரின் உயர்மட்ட ஆலோசகர்களான பாதுக்காப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ், முப்படை தளபதிகளின் தலைவர் ஜோசப் டன்போர்ட், உள்நாட்டு பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வடகொரியாவின் மூர்க்கத்தனத்துக்கு பதிலடி அளிப்பது, அணு ஆயுதங்களால் மிரட்டிவரும் வடகொரியாவிடம் இருந்து அமெரிக்காவையும் அதன் நட்புநாடுகளையும் தேவை ஏற்பட்டால் பாதுகாப்பது தொடர்பாக இந்த சந்திப்பின்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT