வாஷிங்டன்:
யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்தது. மற்ற நாடுகள் இதை அங்கீகரிக்காத நிலையில், அதிரடியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.இந்த முடிவுக்கு எதிராக அரபு நாடுகள் போர்க்கொடி உயர்த்தின.
மேலும், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை நிராகரித்தன.இருப்பினும் இந்த முடிவில் இருந்து டிரம்ப் பின்வாங்கவில்லை. இந்த நிலையில் வரும் மே மாதம், ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறந்து வைக்கப்படுகிறது. தொடர்ந்து இஸ்ரேலின் 70-வது ஆண்டுவிழாவின்போது இந்த நிகழ்வும் நடைபெறும்.இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்க உள்ளார்.
வாஷிங்டன் சென்று உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுடன் டிரம்ப், வெள்ளை மாளிகையில் பேச்சு நடத்தினார். அப்போது அவர், இஸ்ரேல் பாதுகாப்பில் அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து டிரம்ப் கூறும்போது, “மே மாதம் அமெரிக்க தூதரகத்தின் திறப்புவிழாவுக்காக நான் ஜெருசலேம் செல்லக்கூடும். அதை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதை விரைவாக கட்டி முடிக்க இருக்கிறோம். இதைப்போன்று மற்றவர்கள் விரைவாக கட்டி முடிக்க முடியாது. அந்த அளவுக்கு விரைவாகவும், அதிக செலவிலும் கட்டி முடிப்போம்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, “இஸ்ரேலுடனான எங்கள் உறவு, இதுவரை இல்லாத வகையில் மிகச்சிறப்பாக இருக்கும். நெருக்கமாகவும் இருக்கும்” என்றும் தெரிவித்தார். #tamilnews