செய்திகள்

அமெரிக்காவின் முட்டாள்தனமே ரஷியா உடனான உறவு சீர்குலைந்ததற்கு காரணம் - டிரம்ப்

அமெரிக்காவில் இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்களின் முட்டாள்தனமே ரஷியா உடனான உறவு சீர்குலைந்ததற்கு காரணம் என டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். #TrumpPutinSummit #HelsinkiSummit

மாலை மலர்

ஹெல்சின்கி:

அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் சந்திப்பு பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி நகரில் நடந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் பனிப்போர் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய உளவுத்துறையின் தலையீடு தொடர்பாக ராபர்ட் முல்லர் குழு விசாரணை நடத்தி வருவது இரு நாடுகளுக்கும் இடையே மோசமான உறவு உருவானதற்கு முக்கிய காரணம் என்பதை குறிப்பிடும் விதமாக  டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

 ‘ரஷியா உடனான நமது உறவு மிகவும் மோசமான சூழலுக்கு சென்றதற்கு பல ஆண்டுகால அமெரிக்காவின் முட்டாள்தனத்திற்கு நன்றி. தற்போதைய தேடலுக்கும் (ராபர்ட் முல்லர் குழுவின் விசாரணை)  நன்றி’ என அவர் ட்வீட் செய்துள்ளார். 

ரஷிய வெளியுறவு அமைச்சகம் டிரம்ப்பின் ட்விட்டை லைக் செய்ததோடு, ரீ-ட்வீட் செய்துள்ளது. எனினும், சொந்த நாட்டின் மீது டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளதற்கு பலர் எதிர்ப்பு கருத்தும் பதிவிட்டு வருகின்றனர்.