விபத்து 
செய்திகள்

வாளையார் அருகே லாரி மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலி

வாளையார் அருகே ஓணம் பண்டிகைக்கு ஊருக்கு சென்ற கல்லூரி மாணவர் லாரி மோதி உயிரிழந்தார். நண்பர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாலை மலர்

கோவை:

கேரள மாநிலம் ஆலுவாய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டப்பன். இவரது மகன் செபின்(வயது 21). அதே பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவரின் மகன் அக்‌ஷய்(21). நண்பர்களான இவர்கள் 2 பேரும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் ஓணம் விழாவுக்காக இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அக்‌ஷய் ஓட்டினார்.

வாளையார் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது இவர்களின் பின்னால் கோவையில் இருந்து பாலக்காட்டிற்கு காய்கறிகளை ஏற்றி கொண்டு லாரி வந்தது.

இந்த நிலையில் அந்த லாரி எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில் மாணவர்கள் 2 பேரும் லாரியின் அடியின் சிக்கி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து வாளையார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் கஞ்சிக்கோடு தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்து லாரியின் அடியில் சிக்கி உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செபின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அக்‌ஷய் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.