அகர்தலா:
திரிபுரா மாநில பா.ஜ.க. முதல்-மந்திரியாக இருப்பவர் பிப்லப் குமார் தேப். இவரை குட்டி ஹிட்லர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தலாய் மாவட்டத்தில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி, வருகிற 2023-ம் ஆண்டுக்குள் திரிபுராவில் இருந்து கம்யூனிச தத்துவங்களை வேரோடு அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். திரிபுராவில் பா.ஜ.க. கூட்டணி அரசு, ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டது. முக்கிய பதவியில் இருக்கும் அவர் அவ்வாறு பேசியிருக்க கூடாது. கம்யூனிச தத்துவத்தை வேரோடு அகற்ற நினைக்கும் தேப், ஒரு குட்டி ஹிட்லர். அவரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. அவரது ஆட்சிக்காலத்தில் பல இடங்களில் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பல தொண்டர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.