முதியவர் மரணம் 
செய்திகள்

திருவல்லிக்கேணியில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

திருவல்லிக்கேணியில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணி பி.எம். தர்கா பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 80). இவர் அதே பகுதியில் வார்னிஷ் அடிக்கும் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடிக்கு ஏறியுள்ளார். பின்னர் கீழே நின்று கொண்டிருந்த நபரிடம் 3-வது மாடியில் நின்று கொண்டு, பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்வராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.