செய்திகள்

பாதுகாப்பு அளிக்கக்கோரி ‘முத்தலாக்’ வழக்கு தொடர்ந்த பெண் மம்தா பானர்ஜிக்கு கடிதம்

முஸ்லிம்கள் மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பெண் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாலை மலர்

கொல்கத்தா:

முஸ்லிம்கள் மூன்று முறை ‘தலாக்’ (முத்தலாக்) சொல்லி விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 22–ந் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கை தொடர்ந்த 5 முஸ்லிம் பெண்களில் ஒருவர் இஷ்ரத் ஜகான். இவர், மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் வசித்து வருகிறார். 2014–ம் ஆண்டு விவாகரத்து ஆனவர். 13 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், தீர்ப்பு வெளியானதில் இருந்து தனக்கும், தன் குழந்தைகளுக்கும் சில அண்டை வீட்டாரும், தன்னுடைய நாத்தனார்களும் மிரட்டல் விடுத்துக்கொண்டிருப்பதாக இஷ்ரத் ஜகான் கூறினார்.

அதனால் தனக்கும், தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜிக்கு இஷ்ரத் ஜகான் கடிதம் எழுதினார்.