செய்திகள்

திருச்சி ஜங்‌ஷனில் மது அருந்தும் கூடாரமாக மாறிவரும் ரெயில் நிலையம்

திருச்சி ஜங்ஷன் மது அருந்து கூடாரமாக மாறிவருவதால் குடிமகன்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருச்சி:

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி ரெயில் நிலையம் வழியாக பல்வேறு ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் திருச்சி ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் கன்னியாகுமரி, அனந்தபுரி, பொதிகை, செந்தூர், நெல்லை எக்ஸ்பிரஸ் என அடுத்தடுத்து ரெயில்கள் வருவதால் அந்த சமயங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். ஏராளமான பகல் நேர பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

திருச்சி ரெயில் நிலையத் தில் பயணிகள் தங்குவதற்கு வசதியாக தனி அறைகள் உள்ளன. ஆனால் அதில் சில பயணிகள் மட்டுமே தங்குகின்றனர். பெரும்பாலான பயணிகள் ரெயில் நிலையத்தின் முன் பகுதியில் உள்ள வளாகத்தில் தங்களது பொருட்களுடன் தங்குகிறார்கள்.

குறிப்பாக இரவு நேரம் ஆகியதும் ரெயில் நிலையத்தின் முன்புள்ள வளாக பகுதியில் உள்ள நடைமேடையில் ஆதரவற்ற முதியவர்கள், மூதாட்டிகள் பலர் ஆக்கிரமித்து கொள்கின்றனர். ரெயில் நிலையத்திற்குள் செல்வதற்கு கெடுபிடி அதிகம் என்பதால் அவர்கள் ரெயில் நிலைய முன்பகுதியை தங்கள் வீடுபோல் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

அதிலும் சமீப காலமாக அந்த இடத்தை மது அருந்தும் கூடாரமாக மாற்றத் தொடங்கி உள்ளனர். இரவு நேரங்களில் மது பாட்டில்களை வாங்கி வந்து தங்கள் சகாக்களுடன் ஒன்றாக அமர்ந்து மது குடித்து விட்டு காலி பாட்டில்களை அங்கேயே விட்டுச்செல்கிறார்கள். பலர் மது போதையில் அந்த இடத்திலேயே உடைத்து போட்டு விட்டு செல்லும் காட்சிகளையும் அடிக்கடி காண முடிகிறது.

ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள போலீஸ் நிலைய பகுதி நடைபாதையை முதியவர்கள் மட்டுமின்றி பலர் ஆக்கிரமித்து படுத்து வருகின்றனர். அப்போது அந்த இடத்திலேயே மறைத்து போலீசுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் தான் மது அருந்துகின்றனர். மது அருந்தி விட்டு ஒருவர் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டு அந்த மது பாட்டிலை இடத்திலேயே உடைக்கின்றனர்.

அந்த பிளாட்பார தூண்கள் அமைந்துள்ள இடங்களில் தினமும் ஏராளமான மது பாட்டில்கள் கிடக்கின்றன. அந்த வழியாக ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரும் இதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை. இது குடிமகன்களுக்கு கூடுதல் தைரியத்தை கொடுத்துள்ளது.

அவ்வாறு உடைந்து கிடக்கும் மது பாட்டில்களில் நிலை தடுமாறி மிதிக்கும் பயணிகள் பலர் காயத்துடன் வெளியேறும் நிலையும் தொடர்ந்து வருகிறது. திருச் சியில் பல்வேறு இடங்களில் ஆதரவற்றோர் தங்குவதற்கு வசதியாக கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தபோதிலும் அதனை பலர் பயன் படுத்துவது இல்லை. பஸ் நிலையம், ரெயில் நிலைய பகுதிகளை பயன்படுத்தி வருகின்றனர். அங்கு தங்குப வர்களால் தினமும் பல்வேறு பிரச்சினைகள் அரங்கேறி வருகிறது.

எனவே பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டு வரும் முதியவர்கள், ஆதரவற்றோரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பதோடு, குடிமகன்களை கட்டுப்படுத்தவும் அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் எதிர் பார்ப்பு.