செய்திகள்

திருச்சி விமானம் திடீர் பழுது- பயணிகள் உயிர் தப்பினர்

இலங்கையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் விமானி ஓடுதளத்திலேயே விமானத்தை நிறுத்தினார். இதனால் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கே.கே.நகர்:

இலங்கையில் இருந்து திருச்சிக்கு தினந்தோறும் ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இலங்கையில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு காலை 8.40 மணிக்கு வரும். பின்னர் திருச்சியில் இருந்து 9.40 மணிக்கு புறப்பட்டு இலங்கைக்கு செல்லும்.

இந்நிலையில் இன்று காலை இந்த விமானம் இலங்கையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானி சாதுர்யமாக செயல்பட்டு ஓடுதளத்திலேயே விமானத்தை நிறுத்தினார். இதனால் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பின்னர் தொழில் நுட்ப வல்லுனர்கள் விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் தாமதமாக விமானம் திருச்சிக்கு 11.20 மணிக்கு வந்தது. இதன் காரணமாக அதில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் அவதிக்குள்ளாகினர்.

SCROLL FOR NEXT