செய்திகள்

உஷாவுக்காக போராடி கைதான 26 பேருக்கு ஜாமீன்- திருச்சி கோர்ட்டு உத்தரவு

இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததால் பலியான உஷாவுக்காக போராடி கைதான 26 பேருக்கு ஜாமீன் வழங்கி திருச்சி கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.

திருச்சி:

தஞ்சை மாவட்டம் சூலமங்கலத்தை சேர்ந்த ராஜா, தனது மனைவி உஷாவுடன் கடந்த 7-ந்தேதி திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே சென்ற போது, அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

ஹெல்மெட் அணியாமல் வந்த ராஜாவை நிறுத்திய போது அவர் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த காமராஜ், பின்னாலேயே துரத்தி சென்று ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் ராஜாவும், உஷாவும் தடுமாறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜை போலீசார் கைது செய்தனர்.

அதற்கு முன்பு இன்ஸ்பெக்டரை கண்டித்து திருவெறும்பூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கவே, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது அரசு பஸ்கள், போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக பெல் போலீசார் விசாரணை நடத்தி பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக 23 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் ஜாமீன் கேட்டு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-6 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி, 23பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். #Tamilnews

SCROLL FOR NEXT