செய்திகள்

திருச்சியில் செல்போன்-பைக் திருடிய வாலிபர்கள் கைது

திருச்சியில் பல்வேறு பகுதியில் செல்போன் மற்றும் பைக் திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

திருச்சி:

திருச்சியின் பல்வேறு பகுதியில் நிறுத்தியிருக்கும் பைக்குகள் திருடு போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இவ்வாறு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றும் நபர்களை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதன்பேரில் தென்னூர் மகாத்மா காந்தி பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த திருச்சி உறையூர் சவுராஸ் டிரா தெருவை சேர்ந்த வசந்தகுமார் (வயது 28), தில்லை நகரை சேர்ந்த பாலா என்ற சரவணன் (38) ஆகியோர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

மேலும் போலீசார் விசாரித்தபோது, தென்னூர் பாலத்தின் அடியில் நின்ற பைக்கை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர். பின்னர் பைக்கினை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

இதேபோல் கோட்டை ரெயில் நிலையம் அருகே தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த மலைக்கோட்டை வடக்கு தெரு பகுதியை சேர்ந்த மான் பகதூர் மகன் சுரேஷ்பாபு (19), தெப்பக்குளம் வாணரப்பட்டறை தெருவை சேர்ந்த சீதாபதி மகன் சீனிவாசன் (19) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். 

இருவரும் கோட்டை ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் விலை மதிப்பு மிக்க செல்போனையும் பறிமுதல் செய்தனர்.