செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் மேலும் ஒரு பயணியிடம் ரூ.6.43 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மேலும் ஒரு பயணியிடம் ரூ.6.43 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #TrichyAirport

மாலை மலர்

கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு மலேசிய தலை நகர் கோலாலம்பூருக்கு தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பெரம்பலூரை சேர்ந்த பெரியசாமி என்பவரின் உடைமைகளை சோதனை செய்யும் போது, அவரது டிராவல் பேக்கில் 6265 யூரோ, 2579 மலேசியன் ரிங்கிட், 430 சிங்கப்பூர் டாலர், 2000 ரியால், 2760 கிராம் திராம்ஸ் ஆகிய வெளிநாட்டு பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வெளிநாட்டு பணத்திற்கான இந்திய ரூபாயின் மதிப்புரூ.6.43 லட்சம் ஆகும். இது தொடர்பாக பெரியசாமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று திருவாரூரை சேர்ந்த பயணி குமார் , வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த ரூ.18 லட்சம் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் இன்று மற்றொரு பயணியிடம் ரூ.6.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TrichyAirport