செய்திகள்

யானை தாக்கியதில் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் பலி

கூடலுரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அதிகாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உதகமண்டலம்:

லகிரி மாவட்டம் கூடலுர் பகுதியில் உள்ள செம்பககொள்ளி பகுதியை சேர்ந்தவர் பெல்லான்(65). பழங்குடி இனத்தை சேர்ந்த  இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று அதிகாலை சுமார்  3 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, புதர் மறைவில் இருந்து யானை ஒன்று வெளியே வந்தது. அதை கண்டதும் பெல்லான் ஓட்டம் பிடித்தார். ஆனால், விடாமல் துரத்திய யானை அவரை கடுமையாக தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

நீண்ட நேரமாக பெல்லானை காணாத உறவினர்கள் அவரை தேடிவந்தனர். அப்போது உயிருக்கு போராடிய அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே பெல்லான் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.