செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் தொடர்: மணீஷ் பாண்டேயின் அபார ஆட்டத்தால் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மணீஷ் பாண்டேயின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ‘ஏ’ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மாலை மலர்

தென்ஆப்பிரிக்காவில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் க்ளாசெனின் (127) சதத்தால் தென்ஆப்பிரிக்கா 48.2 ஓவரில் 266 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் இந்தியா 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னில் ஆட்டம் இழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 68 ரன்கள் குவித்தார்.

அதன்பின் வந்த விஜய் சங்கர் (0), ரிஷப் பந்த் (20) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 5-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் மணீஷ் பாண்டே சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். அவருக்குத் துணையாக ஹூடா (13), தாகூர் (10), சாஹல் (17), குரணால் பாண்டியா 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தனர்.

48 ஓவரில் 260 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 8 விக்கெட்டை இழந்தது. கடைசி 12 பந்தில் 7 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அணியின் ஸ்கோர் 263 ரன்னாக இருக்கும்போது 9-வது விக்கெட் இழந்தது.

கடைசி விக்கெட் கையில் இருக்கும்போது நான்கு ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் மணிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனால் இந்தியா ‘ஏ’ அணி 49.4 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.