திருப்பூர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு சில தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தொழில்கள் செயல்படலாம்? பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி குறிப்பிட்ட பணியாளர்களுடன் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஊரடங்கு தளர்வு காரணமாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் நிலையில் மாஸ்க் மற்றும் பி.பி.கிட் தயாரிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
தற்போதைய டிரென்டாக, நடிகர்களின் புகைப்படம் பொறிக்கப்பட்ட மாஸ்க்குகளும், அதிமுக - திமுக உள்ளிட்ட கட்சிகளின் சின்னம், கொடிகள் பொறிக்கப்பட்ட மாஸ்க்குகளுக்கும் அதிக வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அஜித், விஜய் படங்கள் பொறிக்கப்பட்ட மாஸ்க்குகள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. இதனால் திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.