கோவை:
அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்ட மைப்பினர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். எல்.பி.எப். தொழிற்சங்க தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் கூட்டு கமிட்டி நிர்வாகிகள் சி.ஐ.டி.யு. வேளாங்கண்ணி ராஜ், ஏ.ஐ.டி.யு.சி. சண்முகம், எச்.எம்.எஸ். ராஜா, ஐ.என்.டி.யு.சி. தவுலத்கான், டி.டி.எஸ்.எப். வில்லியம், எம்.எல்.எப். குமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று 2-வது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.