தலைப்புச்செய்திகள்

இந்தியாவை வல்லரசு நாடாக்கும் பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்- இஸ்ரோ தலைவர்

திட்டமிட்டுள்ள ஏவுதல்களை இந்த ஆண்டிலேயே மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இ.ஓ.எஸ். -05 செயற்கைக்கோள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ். -05 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது:-

நாட்டு மக்களுக்கு காலை வணக்கம். நாடு இன்று சூரிய உதயத்தை பார்ப்பதற்கு முன்பாகவே, விண்ணில் ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ். -05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி உள்ளோம். இந்த உற்சாகமான தருணத்தில், இஸ்ரோ சார்பில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்ரோ குழுவினர்

நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க எங்களால் முடிந்தவரை தொடர்ந்து முயற்சி செய்வோம். நாங்கள் எதிர் பார்ப்பதைவிட அதிக சாதனைகளை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வெற்றிக்காகபாடுபட்ட இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர்கள்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர்களான ராதாகிருஷ்ணன், சோம்நாத், கிரண்குமார் ஆகியோர் இந்த வெற்றியை நேரில் காண வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கும், இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ ஹரிகோட்டாவில்

இந்த நிதியாண்டில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுதல் இது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், இந்த நிதியாண்டில் இங்கிருந்து மேலும் 6 ஏவுதல்களை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

தொழில்துறை

முக்கியமான பணிகள் உள்ளிட்ட அடுத்தடுத்த ஏவுதல்களுக்கான நடவடிக்கைகள் தொழில்துறையினர் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து முறையாக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டுள்ள ஏவுதல்களை இந்த ஆண்டிலேயே மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

பரிசு

‘அதிக வேலைக்கான பரிசு இன்னும் அதிக வேலைதான்’ என்று ஒரு பழமொழி உண்டு. நமக்கு முன்னால் ஏராளமான பணிகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து மேற்கொண்டு நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் சிறந்த சேவைகளை வழங்குவோம். வரும் ஆண்டுகளில் இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக உருவாக்குவதற்கான பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT