தலைப்புச்செய்திகள்

தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஆட்சி நடைபெறுவதாக கம்யூனிஸ்டுகள் கூறுவது வேடிக்கையானது- அமைச்சர் விமர்சனம்

அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதிகாரிகள் சொல்வது தான் உலகம் என்று நம்பிய ஆட்சி நடைபெற்றது.

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

வெற்றி பெற்ற சிறப்பு குழந்தைகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

அப்போது அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:-

உலகம் அனைவருக்கும் சமமானது, அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதுதான் உண்மையான சமூக நீதி. சிறப்பு குழந்தையின் இயற்கையான வாழ்வையே மறுவாழ்வு என்போம், இப்படித்தான் நம் சமூகத்தின் கட்டமைப்பாக உள்ளது. அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அவர்களுக்கு தேவையான வாய்ப்பைக் கொடுத்தாலே போதுமானது. ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கிறேன் என அண்ணா கூறினார்.

விமர்சனம்

ஒரு குழந்தை ஓடி வந்து அவரது மொழியில் சி எம் என கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது.

சிறப்பு குழந்தைகளை சிறு வயதிலேயே கண்டறிய முடியும் அரசு துறையில் இதற்கான திட்டங்களும் உள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம் என்ற உறுதிமொழியை ஏற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்களின் விவரங்களை எடுக்கச் சொன்னதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் அரசு ஆட்சியாக இல்லாமல் அரசு அதிகாரிகள் ஆட்சி என கம்யூனிஸ்டுகள் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில்,

கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதிகாரிகள் சொல்வது தான் உலகம் என்று நம்பிய ஆட்சி நடைபெற்றது.

அரசு

திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க சொன்னது அரசின் கவனத்திற்கு வராமல் நடைபெற்றது என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த சுற்றறிக்கை அனுப்பியவர்கள் மீது அரசு நடவடிக்கையும் எடுத்து உள்ளது.

இந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது என சொல்வது வேடிக்கையாக உள்ளது. அரசு அதிகாரிகள், இந்த ஆட்சியை வெளிப்படையான அரசு அமைந்துள்ளது என்பதை அவர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பாக பார்க்கின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறுகளினால் அனைத்தையும் தவறு என்று சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT