செய்திகள்

தண்டையார்பேட்டையில் குட்கா வியாபாரிகள் 2 பேர் அதிரடி கைது

தண்டையார்பேட்டையில் குட்கா வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராயபுரம்:

தமிழகம் முழுவதும் குட்கா, பான்மசாலா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் தடையை மீறி சென்னையில் பல்வேறு பகுதிகளில் புகையிலை - குட்கா தாராளமாக விற்கப்படுகிறது. இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையடுத்து கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். புகையிலை விற்பனை செய்த வியாபாரிகள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் செஷாங்சாய் உத்தரவுப்படி தண்டையார்பேட்டை மேம்பாலம் அருகே சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகர், சேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பண்டல் பண்டலாக புகையிலை இருந்தது.

இதையடுத்து காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் பெங்களூரைச் சேர்ந்த ஹேமந்த், சவுகார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரிந்தது.

குட்கா வியாபாரிகளான அவர்கள் டெல்லியில் இருந்து புகையிலை கடத்தி சென்னைக்கு கொண்டு வந்தது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மொத்தம் 540 பண்டல் புகையிலை மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் டெல்லி பதிவு எண் இருந்தது. இது தொடர்பாக குறிப்பிட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் டெல்லியில் புகையிலையை மொத்தமாக வாங்கியதும், பின்னர் காரிலேயே பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு சப்ளை செய்து வந்தது தெரிந்தது.

இவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு புகையிலை, குட்கா சப்ளை செய்து வந்துள்ளனர். அவர்களுடன் தொடர்பு உடையவர்கள் யார்-யார் என்று விசாரணை நடந்து வருகிறது.