செய்திகள்

தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்: பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

தமிழகத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடாமல் தடுக்க 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னை:

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடை அடைப்பும் நடக்கிறது.

பஸ்களை இயக்க மாட்டோம் என்று தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன. இருப்பினும் பலத்த பாதுகாப்புடன் பஸ்களை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரேனும் வன்முறையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து போலீசாரும் நாளை பணியில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தீவிரமாகி வரும் நிலையில் முழு அடைப்பின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதில் போலீசார் கவனமுடன் உள்ளனர். இதற்காக 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சென்னையில் அனைத்து துணை கமி‌ஷனர்களும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். #tamilnews

SCROLL FOR NEXT