தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 
செய்திகள்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் மேலும் ஒருவர் சிக்கினார்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் மேலும் ஒருவரை போலீசார் இன்று பிடித்துள்ளனர். ஜெயக்குமாரின் கூட்டாளியான இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

சென்னை:

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் இடைத்தரகர்கள், பணம் கொடுத்து தேர்வு எழுதியவர்கள் என இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் பலர் பற்றிய தகவல்கள் வெளியானது. அதன்பேரில் மேலும் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக்குமார் என்பவரை கைது செய்தனர். இவர் ராயப்பேட்டையில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகம் மூலம் விண்ணப்பதாரர்கள் இல்லாமலேயே தேர்வு மையங்களை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளி ஆவார். இவருக்கு குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டிலும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் இன்று பிடித்துள்ளனர். இவர் ஜெயக்குமாரின் கூட்டாளி என கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.