நெல்லை:
டி.என்.பி.எல். போட்டியின் 9வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர்கொண்டது.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன் குவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக கங்காஸ்ரீதர், கோபி நாத் அபாரமாக விளையாடினார்கள். கோபிநாத் 40 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), கங்காஸ்ரீதர் ராஜூ 38 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
சுனில்சாம் மோகன் பிரசாத், ராஜ்குமார் தலா 2 விக்கெட்டும், பாப்னா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய காரைக்குடி காளை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 54 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த தொடரில் பேட்டிங் வரிசையை மாற்றி களம் இறங்கியது எங்களுக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. நாங்கள் 182 ரன்களை கடந்து அதிகபட்ச ரன் எடுப்போம் என்று நினைத்தோம். ஆனாலும் 175 ரன்கள் எடுத்தது மகிழ்ச்சி அளித்தது.
எங்கள் அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய மூன்றும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு போட்டிகளிலும் அனுபவத்திற்கேற்ப சின்னசின்ன தவறுகளை சரிசெய்து விளையாடி வருகிறோம். இதுபோல் இனி எதிர்வரும் போட்டிகளிலும் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.