செய்திகள்

அம்மாபேட்டை அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

அம்மாபேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் நகை கொள்ளையடிக்க சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே சூழியக்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜன். இவரது மனைவி மல்லிகா (வயது 55).

நேற்று இரவு மல்லிகா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் 2 மர்ம நபர்கள் மல்லிகா வீட்டில் நுழைந்தனர். பின்னர் மல்லிகாவை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 6 பவுன் நகை, 600 கிராம் வெள்ளி ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதுகுறித்து மல்லிகா அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சூழியக்கோட்டை கீழத்தெருவைச் சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி அமுதா (வயது 53). இவர் கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த 2 பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவை திருட்டு போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூழியக்கோட்டை பகுதியில் தொடர்ந்து திருட்டு- நகைப்பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.