கோத்தபய ராஜபக்சே 
செய்திகள்

கோத்தபய ராஜபக்சேவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டம்

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், 13-வது சட்ட திருத்தம் தொடர்பாக அவரை சந்தித்து விவாதிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

மாலை மலர்

கொழும்பு :

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு மற்றும் போலீஸ் அதிகாரம் போன்றவற்றை வழங்குவது தொடர்பாக இந்தியாவின் முயற்சியின் பேரில் கடந்த 1987-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக 13-வது சட்ட திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சட்ட திருத்தத்துக்கு சிங்களர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இலங்கையில் அடுத்தடுத்து அமைந்து வரும் அரசுகள் இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது இல்லை.

இந்த நிலையில் இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், இந்த 13-வது சட்ட திருத்தம் தொடர்பாக அவரை சந்தித்து விவாதிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை அந்த அமைப்பு அறிவித்து உள்ளது. முன்னதாக இந்த தகவலை கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்சிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் சமீபத்தில் இந்தியா வந்திருந்த கோத்தபய ராஜபக்சே 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக சிங்களர்களிடம் ஒருமித்த கருத்து உருவாகாமல் எதையும் செய்ய முடியாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.