செய்திகள்

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்கு உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியும் உயர்த்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் இதனை அறிவித்தார். பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது. 

இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. 

எம்.எல்.ஏ.க்களின் மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் சம்பளம் அதிகமாக வழங்கப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் வலியுறுத்தினர். குறிப்பாக முன்னாள் எம்.எல்.ஏ. கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக வலியுறுத்தப்பட்டது. 

முதல்வர் பழனிச்சாமியின் சம்பள உயர்வு அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன. இதேபோல், தங்களது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.