செய்திகள்

தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து காட்டட்டும்- கமலுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால்

தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து காட்டட்டும் என்று தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் கமலுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால் விடுத்துள்ளார். #ADMK #TNMinister #RajendraBalaji

மாலை மலர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற தேர்தல் வரும் போது ஆட்சி அமைக்க கூட்டணி முயற்சி செய்வர். அதற்கான சந்திப்பு தான் சந்திரபாபு நாயுடு, மு.க. ஸ்டாலின் இடையேயானது. இது அதிசயம் கிடையாது.

அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக அதற்கான வியூகங்களை முதல்வர் நடத்தி வருகிறார். விரைவில் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேசி பலமான கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்.

ஸ்டாலினுக்கு பிரதமர் ஆகும் தகுதி உண்டு என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளவர்கள். சந்திரபாபு நாயுடுதான் மோடியை பிரதமராக்க விடிய விடிய நடந்து ஓட்டு கேட்டார். பாஜகவின் அலையை வைத்து தான் முதல்வர் ஆனார்.

மத்திய ஆட்சியில் பெரிய அளவில் குற்றங்கள், குறைகள் இல்லை. மக்கள் பணியில் அக்கறையோடு உள்ளனர். ஆன்மீக ரீதியான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறார்கள்.

குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர் கட்சிகள் சொல்லலாம். இடைத்தேர்தல் நிறுத்தப்படும் என்று தங்க தமிழ்செல்வன் கூறி வருகிறார்.

இந்த 2 வருடம் மட்டும் அ.தி.மு.க. ஆட்சி அல்ல. 200 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சி தொடரும்.

மது விற்பனையை நிறுத்தினால் பாண்டிச்சேரிக்கோ, கர்நாட கத்திற்கோ சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.