தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய்: முதல்வர்

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும்,

திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர்  பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட

கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட  பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

இதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும்  மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய்

நிவாரணமாக அரசு வழங்கும்.

அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின்  ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில்  செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும்,  நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவ மனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/சிகிச்சை பெற வேண்டும். பொது மக்கள் அரசின்  முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.