சென்னை:
சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
அடையாறு பகுதியில் ஆந்திர மகிளா சபா மருத்துவமனை அருகில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, மணிமண்டபம் கட்டப்பட்டு, பணி நிறைவடைந்ததையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2.80 கோடி செலவில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை அன்னாரது பிறந்த நாளான 01.10.2017 அன்று தமிழக அரசின் சார்பில் திறப்பு விழா நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.
இம்மணிமண்டபம் திறப்பு விழா 01.10.2017 காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.
இத்திறப்பு விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் குடும்பத்தினர், திரையுலக பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.