செய்திகள்

பிரதமர் மோடியின் 67-வது பிறந்தநாள்: கவர்னர் - முதல்வர் பழனிசாமி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 67-வது பிறந்தநாளையொட்டி தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை:

பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாளையொட்டி கவர்னர் சி.எச். வித்யாசாகர் ராவ் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

உங்களது பிறந்த நாளையொட்டி எனது இதயம் கவர்ந்த வாழ்த்துக்களை தயவுசெய்து ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

உங்களது திறமை கோட்பாடுமிக்க அணுகு முறை, மக்களின் நலன் சார்ந்த திறமைமிகு திட்டங்கள் இந்தியாவை சர்வதேச வரைபடத்தில் இடம் பெறச்செய்துள்ளது. உங்களது தொலைநோக்கு பார்வை மற்றும் திட்டங்கள் நாட்டை வலுப்படுத்தும். உள்நாட்டு உற்பத்தியை சர்வதேச சந்தையில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் நீண்டகாலம் மகிழ்ச்சியுடனும், உடல் நலத்துடனும் வாழ்ந்து நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்யவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

உங்களது மகிழ்ச்சியான பிறந்தநாளில் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை புரிய எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல உடல் நலம் மற்றும் பலத்தை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT