நெல்லை:
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் அண்மையில் நியமிக்கப்பட்டார். கோவையில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற கையோடு மாவட்ட நிர்வாகம் குறித்து அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினார். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு போய் தூய்மை பணிகளையும் மேற்கொண்டார் புரோகித். இதுவும் சர்ச்சையானது.
திருப்பூருக்கும் போய் மாவட்ட நிர்வாகத்தில் தலையிடுவேன் என்றார் ஆளுநர். ஆனால் கடுமையான எதிர்ப்பின் காரணமாக மாவட்ட நிர்வாகங்களில் தலையிடாமல் இருந்தார் புரோகித்.
இந்நிலையில் இன்று நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புரோகித் பங்கேற்றார். அத்துடன் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்தார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பேருந்து நிலைய பகுதியில் குப்பைகளை அகற்றினார். ஆளுநருடன் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் கலந்து கொண்டார்.
மேலும் அங்கு சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுக்கும் புரோகித் அறிவுறுத்தல் விடுத்தார். தற்போது இந்த விவகாரமும் சர்ச்சையாகி உள்ளது.