பெங்களூர் மற்றும் ஐதராபாத்தின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதனால் பிளாஸ்டிக் அரிசி தமிழகத்திலும் வந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே பரவியது. இதற்கிடையே தமிழகத்தின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது.
இதையடுத்து தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை மற்றும் உணவு வழங்கல் துறையினர் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகள், அரிசி குடோன்கள், மொத்த விற்பனை கடைகள், சில்லரை விற்பனை கடைகளில் சோதனை நடத்தப்பட்டன. ஆய்வுக்காக அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
சேகரிக்கப்பட்ட மாதிரி அரிசிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சேகரிக்கப்பட்ட அரிசி மாதிரிகள் சென்னை, மதுரை, சேலம், கோவை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள உணவு ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அந்த பரிசோதனையிலும் பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் சேகரிக்கப்பட்ட அரிசி மாதிரிகளை நுண்ணுயிரியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்று தெரிய வந்துள்ளது.