புதுடெல்லி:
காவிரி மேலாண்மை வாரியம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டாம் கட்ட போராட்டத்தை கடந்த 39 நாளாக நடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தினம் ஒரு போராட்டத்தை கையில் எடுத்து நடத்தி வருகின்றனர். நேற்று அவர்கள் தமிழகத்திற்கு போதிய வறட்சி நிவாரணம் வழங்காமல் நதிகளை இணைத்து தண்ணீர் தரவில்லை போன்ற துரோகங்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விளைவிப்பதாக கூறி, விவசாயிகள் உண்ண உணவின்றி பன்றிக்கறி சாப்பிடும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் 40-வது நாளான இன்று தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த 400 விவசாயிகளின் மனைவிமார்கள் தங்கள் பிள்ளைகளுடன் குடும்பம் நடத்த ரூ.25 லட்சம் இழப்பீடு நிதியாக மத்திய அரசு வழங்க வேண்டும், ஆனால் அதனை வழங்காமல் விவசாயிகளின் குடும்பத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைப்பதாக கூறினர்.
இதனை தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி, பெண் விவசாயிகள் இருவரை ஏர் கலப்பையில் பூட்டி ஜந்தர் மந்தர் வீதியில் உழவு ஓட்டும் நிலைமையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தற்கொலை செய்துகொண்டு இறந்த திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணனின் மனைவி ராணி உள்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.