சென்னை:
ஐ,நா. மனித உரிமை ஆணையத்தின் 36-வது அமர்வு, ஜெனிவாவில் கடந்த 11ஆம் தேதி முதல், வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வைகோ ஜெனிவா சென்றுள்ளார். இந்த அமர்வில் ஈழத் தமிழர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதிமுதல் வைகோ தனது கருத்தை முன்வைத்து பேசி வருகிறார்.
ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் வைகோ இரண்டு முறை பேசினார். பேசிவிட்டு வந்த வைகோவை சிங்களர்கள் பலர் சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒரு பெண்மணி, நீ இலங்கைப் பிரஜை இல்லையே? நீ இலங்கையைப் பற்றி எப்படிப் பேசலாம்? என்று கேட்டார்.
இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முற்பட்ட செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தயது என்று கூறினார். மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடக்காமலிருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.